போராட கற்றுக் கொடுத்தது... 'ஆதித்யா வர்மா' படம் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது என்று விக்ரம் மகன் இன்ஸ்ட்ராகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
விக்ரம் மகன் துருவ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஆதித்யா வர்மா'. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை துருவ் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்தான் ஆதித்யா வர்மா படம். இந்த படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் துருவ் தெரியப்படுத்தியுள்ளார்.
’ஆதித்யா வர்மா அழகான விஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அவன்தான் எனக்கு வாழ்க்கைப் பற்றிய அர்த்தத்தை, காரணத்தை, என்னைப் பற்றிய தெளிவை, மிக முக்கியமாக எப்படி விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதையும் கற்று தந்தான்.
இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள அனைவர் மீதும் எனது அன்பை செலுத்துகிறேன். குறிப்பாக வீடியோவில் கடைசியாக இடம்பெற்றவருக்கு அவர் இல்லாமல் இது நடந்திருக்காது” என்று பதிவிட்டுள்ளார். வீடியோவில் கடைசியாக தெரியும் முகம் அவரது அப்பா நடிகர் விக்ரம்தான்.
இந்த படம் முன்பு பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் உருவாகி கைவிடப்பட்ட படம் என்பது குறிப்பிட்டத்தக்கது.